காலிஸ்தான் கிளர்ச்சியாளர் அம்ரித்பால் சிங், காவலர்களிடமிருந்து தப்பிக்க சுங்கச்சாவடி வழியாக கார் விட்டு கார் மாறி பின் பைக்கில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அம்ரித்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு அவரை தேடிவருகிறது பஞ்சாப் காவல்துறை. மக்களிடமும் ஒத்துழைப்பு கேட்டுள்ளது பஞ்சாப் காவல்துறை.

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸை சேர்ந்த அம்ரித்பால் சிங் என்பவர், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' என்பதன் தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டவர் அவர். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாள்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை கைது செய்திருந்ததை கண்டித்தே, அவரை விடுதலை செய்ய கோரி அப்படி அவர்கள் போராடியதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவரும் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தீவிரம் காட்டியது.

image

ஆனால் அவரது ஆதரவாளர்களை மட்டுமே கைது செய்ய முடிந்தது. இந்நிலையில் அவர் நேற்றைய தினம் காவலர்களிடம் சிக்காமல் இருக்க, கார் டூ கார், பின் பைக் என மாறி மாறி வெவ்வேறு உடைகளில் தப்பிச்சென்றுள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சுமார் 80 ஆயிரம் காவல் துறையினரையும் மீறி அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றது எப்படி? உங்கள் காவல்துறையினர் என்ன செய்துகொண்டிருந்தனர்” என்று அம்மாநில காவல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், “அம்ரித்பால் சிங்கை பிடிக்க முடியாமல் போனது, முற்றிலும் உள்துறையின் தோல்வி” என நீதிமன்றம் சாடியுள்ளது. காவல் துறையினர் அனைவரும் அம்ரித்பால் சிங்கின் பின்னால் இருப்பதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

image

இதுதொடர்பாக, பஞ்சாப் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) சுக்செயின் சிங் கில் பேசுகையில், “வீடியோவில் அவருக்கு உதவுவோர் மன்ப்ரீத் மன்னா (28), குர்தீப் சிங் (34), ஹர்ப்ரீத் சிங் (36) மற்றும் குர்பெஜ் சிங் ஆகியோராவர்” என்றுள்ளார். தொடர்ந்து அனைவரையும் தேடும்பணியை தீவிரப்படுத்தியுள்ளது பஞ்சாப் காவல்துறை. அவர் மாறுவேடத்தில் இருக்கலாமென புதிய புகைப்படங்கள் சிலவற்றையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர் சென்றதாக சொல்லப்படும் கார்-ஐ பறிமுதல் செய்துள்ளது. முன்னதாக அம்ரித்பால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அம்ரித்தின் உறவினர் மற்றும் ஓட்டுநர் ஏற்கெனவே சரணடைந்துவிட்டனர். இப்போது அவர்கள் அசாமில் உள்ளனர்.

உளவுத்துறை தகவல்களின்படி, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் அம்ரித்பால் சிங்கிற்கு அவர் துபாயில் தங்கியபோது அவருக்கு நிதி கொடுத்ததாக தெரிகிறது. பஞ்சாபில் தீவிரவாத சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்புவதற்கு முன் ஐஎஸ்ஐ மூலம் பயிற்சி பெற ஜார்ஜியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அம்ரித்பால் சிங், வீட்டில் இருந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் துப்பாக்கிகளை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்த நிலையில், அம்ரித்பால் சிங்கின் சொகுசு காரை கைப்பற்றியுள்ள காவல் துறை, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வழக்கைப் பதிவு செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/CHLVpwE